×

பள்ளி பேருந்தில் விடியவிடிய ‘ஷூட்டிங்’ ஆண் உடையில் நண்பர்களுடன் டான்ஸ் டிக்டாக்கில் வெளியிட்ட சிறுமி: போலீசார் விசாரணை

சென்னை:  சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, ஏ பிளாக்கில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு புரசைவாக்கம், தாண்டவன் தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (40) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கோட்டீஸ்வரன் இரவு பணிக்கு வந்திருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பேருந்தில், நள்ளிரவில் பாட்டு பாடும் சத்தமும், டான்ஸ் ஆடும் சத்தமும் கேட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், பேருந்தில் ஏறி பார்த்தார். அப்போது 4 சிறுவர்கள் பாட்டு பாடிக்கொண்டே,  டான்ஸ் ஆடியபடி டிக்டாக் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். இவரைப்பார்த்ததும், 4 சிறுவர்களும் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களை, கோட்டீஸ்வரன் விரட்டி சென்று, பிடிக்க முயன்றார். அவரிடம் 13 வயது சிறுவன் மட்டும் சிக்கினான்.

அவனை விசாரித்ததில், தனது 3 பாய் பிரெண்டுடன் விடிய விடிய பஸ்சில் டிக்டாக் வீடியோ எடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவனை அரும்பாக்கம் போலீசில் கோட்டீஸ்வரன் ஒப்படைத்தார். விசாரணையில், பிடிபட்ட சிறுவன் ஆண் அல்ல, பெண் என்பதும், அதே பகுதியில் அந்த சிறுமி சாலையோரத்தில், தனது பெற்றோருடன் தங்கியிருப்பதும்,ஆண்களை போல் முடிவெட்டி, அவர்களின் உடை அணிந்து,  தனது 3 ஆண் நண்பர்களுடன் தனியார் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பேருந்தில் 4 பேரும் விடிய விடிய டிக்டாக் வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார் அந்த சிறுமியின் பெற்றோர்களை அழைத்து விசாரிக்கின்றனர். மேலும், இவர்கள் எதற்காக இரவில் பஸ்சில் தங்கினார்கள், அந்த பெண் எதற்கு ஆண் உடைகளை அணிந்து வந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


Tags : School bus, ‘shooting’, dictator, girl, police investigation
× RELATED சிறுமிகள் பலாத்காரம் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி